Pages

Thursday, December 18, 2008

சோர்வை விரட்ட இதோ tips

சோர்வை விரட்ட…
வாழ்க்கை மிகவும் வெறுப்பாக இருக்கிறதா? மிகவும் சோர்ந்து போய் விட்டீர்களா? சில எளிய வழிகளால் மீண்டும் உங்களை பழைய நிலைக்கு உற்சாகமுள்ளவராக புதுப்பித்துக் கொள்ள முடியும்.
1. முதலில் உங்களுக்கு இதுவரை வந்த பாராட்டு, ஊக்கம் முதலியவற்றை நினைத்துப் பாருங்கள். பிறகு, நீங்கள் பாராட்ட நினைக்கிறவர்களுக்கு பாராட்டுக் கடிதம் எழுதுங்கள். நன்றிக் கடிதம் எழுதுங்கள். நீங்கள் அன்று சொன்ன ஒரு சொல், அல்லது உங்களின் போன வருடக்கடிதம் எனக்கு ஊக்கத்தை புதுப்பித்துள்ளது, நன்றி என்று கூறி எழுதிப்பாருங்கள், போனிலும், நேரிலும் சொல்லத் தயங்கும் பாராட்டு, நன்றி முதலியவற்றை கடிதங்கள் மூலம் எளிதில் சொல்லமுடியும்.
2. உடம்பை ஒருமுறை நன்கு குலுக்குங்கள். அல்லது ஒரு ஐந்து நிமிடங்கள் ஆடுங்கள். உங்கள் சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
3. ஐந்து நிமிடங்கள் வாய்விட்டுச் சிரியுங்கள். நகைச்சுவைக் கட்டுரை படிக்கலாம். அல்லது நகைச்சுவைக் காட்சிகளை டி.வி.யில் அரைமணி நேரம் பாருங்கள். மன இறுக்கம் உடனே அகலும்.
4. ஒரு தலையணையை தலைக்கு வைத்துக்கொண்டு நீட்டிப்படுங்கள். இரண்டு கைகளையும் தொப்புளில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு உள்ளே சென்று வெளியே வருவதை கற்பனையில் பாருங்கள். பிறகு கால்களை படுத்த நிலையிலேயே உயரத்தில் தூக்குங்கள். பிறகு கால் பாதங்கள் தரையில் தொட்டுக் கொண்டிருக்க இடுப்பையும், முழங்கால்கலையும் முன்னோக்கித் தூக்குங்கள். இந்த பயிற்சியை தினமும் 5 நிமிடங்கள் அல்லது 10 நிமிடங்கள் செய்தால் உங்களின் சக்தி அதிகரிக்கும்.
5. எப்போதும் தைரியமாக வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள். நமது மாபெரும் பயங்களை வெல்லக்கூடிய ஒரே மாற்று மருந்து, நச்சு முறிவு மருந்து தைரியமான எண்ணங்களும், செயல்களும்தான், தைரியமான செயல் முறையால் மிகப்பெரிய சக்தி நம்முள் எழுகிறது. இதுவே படைக்கும் திறன், உடல் உறுதி, சமாளித்து வெற்றிபெற தேவையான ஆற்றல் முதலியவற்றைத் தந்து நம்மை உயர்த்துகிறது.
6. வேலை செய்யப் பிடிக்காதபோது, பதட்டமாக உள்ளபோதும் மூச்சை நன்கு இழுத்து விடுங்கள். இந்த மூச்சுப் பயிற்சியால் வெறுமை நிலை ஏற்படாது. மன அமைதி கிடைக்கும்.
7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உங்கள் சக்திக்கு உட்பட்ட சிறு சிறு பரிசுப் பொருள், வாழ்த்து அட்டை போன்றவற்றை அனுப்புங்கள். அவர்கள் காட்டும் பிரதிபலிப்பில் குதூகலிப்பீர்கள். இது உறுதி.
8. பாதிப்பாதியாக நிறைய வேலைகள் அப்படியே உள்ளனவா? முடிக்காத வேலைகளைப் பட்டியல் எடுத்து ஒவ்வொன்றாக முடியுங்கள். இந்த ஒழுங்கு முறையை வீட்டிலும் அலுவலகத்திலும் பின்பற்றினால் உங்கள் மீது உங்களுக்கு சுயமரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் அடுத்ததைச் சந்திக்க உற்சாகமாக இருக்கும்.
9. உங்கள் உடைகளில் மாற்றம், முடிவெட்டிக் கொள்வதில் மாற்றம், வாரம் ஒரு முறை, அருகில் உள்ள இதுவரை செல்லாத ஊர்களுக்குச் சென்று வருதல் என்று உங்கள் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். உடை அணிவதில் காட்டும் இந்த மாற்றம் உங்களுக்கு அளவற்ற உற்சாகத்தைத் தரும். சுத்தமான ஆடைகளையே தினமும் அணியுங்கள்.
10. உங்களுக்கு மிகவும் பிடித்தமான மூன்று பொருள்களைக் குறிப்பிடுங்கள். எந்த மூன்றைக் கண்டு வெறுக்கிறீர்கள்! சிறந்த மூன்றிலிருந்து நீங்கள் உலகிற்கு கொடுத்த சிறப்பு எது? பதிலை எழுதுங்கள். வெறுக்கின்ற மூன்று அம்சங்களில் உங்களின் பயங்களும் அறியாமையுமே முதலிடத்தில் இருக்கும். எனவே, பயப்படாமல் அறிவுடன் வாழ முடிவு செய்யுங்கள்.
11. உங்களது வாழ்க்கை முறை, சத்துணவு முதலியவற்றை நன்கு ஆராயுங்கள். உங்கள் பணி, உடல் நலன் முதலியவற்றிற்கு ஏற்ப சத்துணவுத் திட்டம் தயார்படுத்தி பின்பற்றுங்கள்.
12. உங்கள் உடல்நலமும், செல்வ வளமும் நன்கு இருப்பதைக் கற்பனையில் சதா பாருங்கள். உங்கள் உருவத்தை வெற்றிகரமான, ஆரோக்கியமான மனிதராகவே பாருங்கள். பொட்டாசியம், மக்னீஷியம் உள்ள பழங்களையும், பருப்பு வகைகளையும் நன்கு சேர்த்துவந்தால் நரம்பு மண்டலம் துடிப்பாகவும் அமைதியாகவும் இருந்து, சுறுசுறுப்பான வாழ்க்கையை உங்களுக்கு உருவாக்கித்தரும். வாழ்வில் சோர்வு தலைகாட்டாது.
சோர்வை நீக்கும் உணவு வகைகள்:
சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதில் சோளம், புரதம் நன்கு உள்ள உருளைக்கிழங்கு, அதிக நேரம் மன உளைச்சலுடன் வேலை பார்க்க நேரிட்டாலும் இதயம் சிறப்பாக இயங்க ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ், சப்பாத்தி, கொண்டைக்கடலை முதலியவைகளில் உள்ள தயாமின் என்ற வைட்டமின், ஆக்ஸிஜனை உடலின் அனைத்துச் செல்களுக்கும் அனுப்ப பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலியவைகளில் உள்ள இரும்புச்சத்து தாராளமாக உதவும். இந்த உணவுகள் அடிக்கடி உங்கள் உணவில் இடம் பெற்றால் மனமும் உடலும் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
தொடரும்

யோசனைகள்

ஆறு யோசனைகள்
மன்னிப்பது நல்லது!
பிறரைக் குறை கூறிக்கொண்டோ அல்லது திட்டிக் கொண்டே தங்கள் வேலைகளை நாள் முழுவதும் சிலர் பார்ப்பார்கள். இவர்களுக்கு வயிறு சம்பந்தமான கோளாறுகள் வரும். இந்தக் கோளாறு இருந்தால் உங்களுக்குக் கெடுதல் செய்தவர்களை உடனடியாக மனப்பூர்வமாக மன்னித்து மறந்துவிடுங்கள். மருந்து இன்றியே வயிற்றுக் கோளாறுகள் இதனால் விரைந்து குணமாகும் நம்புங்கள்.
வாந்தி வருவது போல் இருந்தால்…
வயிற்றுக் கோளாறுகளை முன்கூட்டியே தடுக்க ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகும் உலராத ஓர் இஞ்சித்துண்டு சாப்பிடவும். இதே போல வாந்தி வருவதை நிறுத்த, உலர்ந்த சிறிய இஞ்சித்துண்டை உப்புடன் சாப்பிடவும். எப்படிப்பட்ட வாந்தியும் உடனே அமைதியாகி ஓயும்.
உடல் நாற்றம் நீங்க…
மழைக்காலத்தில் வேப்ப இலையை அரைத்து இரண்டு டீஸ்பூன் அளவு அந்தத் துவையலை குளிக்கும் தண்ணீரில் கலக்கிவிட்டுக் குளிக்கவும். இது உடல் நாற்றத்தைப் போக்கும் (வேப்ப எண்ணெய்தான் நாறும்). தோலில் எரிச்சல் குணமாகும். வீட்டில் பூச்சிகள் இருந்தால் அது உங்களைக் கடிக்காது.
விரல் சுட்டுவிட்டால்!
சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து இறக்கும்போது விரல்கள் சுட்டுவிட்டால் ஐஸ் துண்டுகளை அந்த இடத்தில் வைக்கவும். இதனால் கொப்பளமும் வராது. ரெப்ரிஜிரேட்டர் இல்லாதவர்கள் உடனடியாகப் பக்கத்து வீட்டிலாவது ஐஸ் துண்டுகளைப் பெறுவது நல்லது.
திரைப்படப் பாடல்களால் உடல் நலம் உண்டு!
நல்ல உடல் நலம், நல்ல மனவளம், ஆழ்ந்த அமைதி, எளிதில் ஓய்வு எடுக்க, ஆழ்ந்த தியானம் செய்ய, படுத்து உடனே தூங்க 1,250 ரூபாயில் ஒரு காம்பாக்ட் டிஸ்க் வந்துள்ளது. இதில் கர்நாடக இசைதான் உள்ளது. ஆன்ட்ருவெல் என்பவர் ஆராய்ந்து ஒலிப்பதிவு செய்த இசைத்தொகுப்பு இது.
மறதி வியாதி மறைய…வயதானவர்களுக்கு வரும் மறதியிலிருந்து விடுபடத் தினமும் வைட்டமின் ‘ஈ’ மாத்திரையைச் சாப்பிட வேண்டும். அளவு : 2000 சர்வதேச யூனிட்டுகள். சற்று அதிகமாகச் சாப்பிட்டாலும் கெடுதல் இல்லையாம். ஆனால், டாக்டர்தான் மாத்திரை அளவை முடிவு செய்ய வேண்டும். அமெரிக்காவில் உள்ள தேசிய முதியோர் நல அமைப்பினர் இரண்டு ஆண்டுகளாக இதே அளவு கொடுத்துவந்தால் பல ஞாபக மறதி நோய்க்காரர்கள் நன்கு குணம் பெற்றனர்.
வாழ நினைத்தால் வாழ முடியும்!
குண்டு பாய்ந்தும் 76 வயது வரை நலமாக வாழ்ந்த மனிதர்!
1822ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள்… வில்லியம் ப்யூமண்ட் என்ற இயவயதுக் கனடா இராணுவ டாக்டருக்கு அவசரத் தொலைபேசி அழைப்பு.
18 வயதான அலெக்ஸிஸ் செயின்ட் மார்ட்டின் என்ற விலங்குகளின் தோல்களை விற்கும் வியாபாரி ஒருவர் மீது எதிர்பாராத விதமாகக் குண்டு பாய்ந்துவிட்டது என்ற தொலைபேசித் தகவலைத் தொடர்ந்து டாக்டர் ஓடினார்.
மக்கள் அதிகமுள்ள கடைவீதியில் சுடப்பட்ட இந்த வியாபாரி பிழைத்திருக்கவே முடியாது. காரணம், இடப்பக்கம் இடுப்பு எலும்புக்கு மேல் பெரிய அளவு ஓட்டை ஏற்பட்டு அந்த இடமே வெந்து கருகிக் காணப்பட்டது. டாக்டர் அந்த இடத்திலேயே இரத்தத்தைக் கொடுத்து, 36 மணி நேரத்திற்குள் வியாபாரி இறக்க நேரிடலாம் என்று கூறிவிட்டார்.
ஆனால், மார்ட்டின் பிழைத்து எழுந்தார்! ஓர் அங்குலம் அளவுக்கு இடுப்புக்குக் கீழ் அகலமான ஓட்டை ஆழத்தில் வயிற்றுத் தசையின் கடைப் பகுதியும் தெரிந்தது. 76 வயதுவரை இந்த ஓட்டையுடன் நலமாக வாழ்ந்தார். மிருகங்களை கண்ணி வைத்துப் பிடித்து தோல் வியாபாரமும் செய்தார்.
வயிற்றில் உள்ள ஓட்டையுடன் எப்படி நலமாக வாழ்ந்தார்? காய்ச்சல் என்று இவர் படுத்ததே இல்லை. மேலும், இவர் சாப்பிட்ட உணவும் எப்படி சரியாக ஜீரணமானது? முக்கியமாக பெரிய ஓட்டையுடன் காணப்பட்ட இவர், அடுத்த 58 ஆண்டுகள் வாழ்ந்தது எப்படி? அதிசயம்தான்!

மெடிக்கல் பட்ஜெட்

மருத்துவ பட்ஜெட்….
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் காய்ச்சலில் படுத்தவர்கள் கூட நன்கு தேறி வர நான்கைந்து நாட்கள் ஆகிவிடுகின்றன. இந்த நிலையில் நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவர், மாத்திரைகள் துணையுடன் சலிப்புடன் வாழ்கின்றனர்.
அடிக்கடி மாத்திரைகளிலும் மாற்று மருத்துவமுறைகளிலும் கவனத்தைச் செலுத்தாமல் உணவில் கவனத்தைச் செலுத்தினால் உடல் நலத்தை மிகுந்த சக்தியுடன் திரும்பவும் புதுப்பித்து விடலாம்.
உதாரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக உணவு கூடாது. எனவே, அவர்கள் உணவில் கவனத்தைச் செலுத்தும்போது உணவுகளையே மருந்தாகச் சாப்பிட்டு நோயைக் கட்டுப்படுத்தி வாழும் முறையைக் கையாள்கின்றனர். இதனால் மாத்திரைகளையும் குறைவாகச் சாப்பிட நேரிடுகிறது. ஆரோக்கியமும் நீடிக்கிறது.
இதே முறையை ஆரோக்கியமாக உள்ளவர்களும், தங்கள் நோய்க்குச் சிகிச்சை பெறுகிறவர்களும் பின்பற்றினால் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியம் புதுப்பிக்கப்பட்டு வாழ்நாளும் நீடிக்கும்.
கைக்குத்தல் அரிசி, கோதுமை உப்புமா, முளைவிட்ட கொண்டைக்கடலை, பாதாம் பருப்பு, வேர்க்கடலை, வால்நட் பருப்பு, பார்லி, வாழைப்பழம், உலர்ந்த திராட்சை, அன்னாசிப்பழம், சாத்துக்குடி, தேங்காய், பாகற்காய், அவரைக்காய், காரட், சோயா பீன்ஸ், பசலைக்கீரை, உருளைக்கிழங்கு இவை அனைத்தும் நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் பாதுகாக்கும் சூப்பர் உணவுகளாகும். இந்த உணவு வகைகளில் துத்தநாக உப்பு, பைரிடாக்ஸின் என்ற வைட்டமின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், கால்சியம், தொற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் வைட்டமின் சி ஆகியவை உண்டு. இது மட்டுமல்ல, கண்களில் உள்ள ரெட்டினாவிற்கு வைட்டமின் ஏ-யை விரைந்து அனுப்பும் வசதி, நோய் எதிர்ப்புப் பொருள்கள் தொடர்ந்து உற்பத்தி ஆகும் வசதி, கொலாஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் வசதி, மூளையும், நரம்பு மண்டலமும் சிறப்பாக இயங்க உதவும் சத்துணவு, இதயநோய், நீரிழிவு முதலிய முழுக்கட்டுப்பாட்டில் நீடிக்கும் வசதி, பற்சொத்தை வராமல் தடுப்பது, சோடியமும் பொட்டாசியமும் உடலில் போதுமான அளவு இருக்க உதவும் பைரிடாக்ஸின் செயல்முறை என அனைத்தும் இந்த சூப்பர் உணவு வகைகளில் உள்ளன.
மேற்கண்ட பட்டியலில் உள்ளபடி உணவுத்திட்டத்தைப் பின்பற்றினால் எளிமையாக ஒவ்வொரு செல்லும் புதுப்பிக்கப்படுகிறது. நோய்களும் மறைகின்றன.
காலையில் சாப்பிடும் முளைவிட்ட கொண்டைக்கடலையும், மதிய உணவில் சேரும் சோயா பீன்ஸும் அல்லது சோயா பாலும் இரத்தத்தை சுத்தப்படுத்திவிடுகின்றன. இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் முழுமையாகக் குறைந்து போகிறது.
உடல் பலவீனத்தையும், பித்தத்தையும் அன்னாசிச்சாறு குணமாக்குகிறது. குடலில் புழுக்கள் இல்லாமல் பாதுகாத்தும் வருகிறது. சாத்துக்குடியில் கால்சியம் நன்கு கிடைப்பதால் எலும்புகள் பலமடைந்து சுறுசுறுப்பைத் தினமும் பெற்றுக் கொள்ளலாம். அன்னாசிப் பழச்சாறு உடலில் விஷப்பொருள்கள் சேராமல், அவற்றை உடனுக்குடன் வெளியேற்றி விடுகிறது. தொற்று நோயாலும், திடீர் திடீர் என்று காய்ச்சல், உடம்பு வலி என்று அவதிப்படுகிறவர்களும் அன்னாசியையும், சாத்துக்குடியையும் அடிக்கடி சாப்பிடவும்.
நமக்குத் தெரியாத, டாக்டரின் பரிசோதனையில் உறுதி செய்ய முடியாத, நமக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களையும் கூட மேற்கண்ட உணவுகளில் உள்ள பயோட்டின், பைரிடாக்ஸின் போன்றவை குணப்படுத்தும். ஒற்றைத் தலைவலி அடிக்கடி வந்தால் மேற்கண்ட உணவு வகைகளின் மூலம் உடல்நலத்தைப் புதுப்பிப்பதில் கவனம் செலுத்தினால் போதும்.
வந்தபின் பெரும் பணம் செலவு செய்து குணப்படுத்துவதை விட முன்கூட்டியே இந்த சூப்பர் உணவுகளை கவனமாகச் சேர்த்து வந்தால் மருத்துவ பட்ஜெட் கீழே விழுந்துவிடும். இந்த சூப்பர் உணவு மருந்துகளால் பின்விளைவுகள் எதுவுமில்லை என்பதும் நீங்கள் அறிந்த செய்தி.
மனித உறுப்புகளில் முக்கியமான கல்லீரலை, செலினியல் உப்பு உள்ள முளைவிட்ட கோதுமை, பார்லி, ஓட்ஸ், டர்னிப் கீரை முதலியன முழுமையாகப் பாதுகாக்கும். விரைந்து குணமாகவும், எப்போதும் முழு உடல் நலப் பாதுகாப்புடன் வாழவும், கல்லீரல் எக்காரணம் கொண்டும் கெட்டுப் போகாமல் இருக்கவும் மேற்கண்ட நான்கு உணவு வகைகளில் இரண்டையாவது தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.
சிகரெட் புகைக்காமல் இருந்தால்….
சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் 24 மணி நேரத்தில் ஹார்ட் அட்டாக் அபாயம் முழுமையாகக் குறைகிறது. இரண்டு வாரம் புகைக்காமல் இருந்தால் இரத்த ஓட்டம் சீராகும். நடப்பதற்கு சிரமம் ஏற்படாது. நுரையீரல்களின் செயல்பாடு 30% அதிகரிக்கும். தெரு நாற்றம் மூக்கைத் துளைக்கும். உணவு ருசி நன்கு தெரியும். பசிப்பது அதிகரிக்கும். ஒரு மாதம் முதல் ஒன்பது மாதம் வரை புகைக்காமல் இருந்தால் மூச்சுவிடுதலில் உள்ள சிரமம் குறைந்துவிடும். இருமல், சைனஸ், சோம்பல் காணாமல் போயிருக்கும். ஒரு வருடம் புகைக்காமல் இருந்தால் இதயம் சம்பந்தமான நோய்களின் அபாயம் 50% குறைந்திருக்கும். புகைக்காத பழக்கம் தொடர்ந்தால் புற்று நோய் அபாயமே இல்லை. திடீர் ஹார்ட் அட்டாக் என்று பேச்சும் இல்லை. மன உறுதியுடன் ஒரு நாள் மட்டும் புகைக்காமல் இருந்துவிட்டால் எப்போதும் சிகரெட் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டார்கள்.

என் முதல் கவிதை

பெட்ரோல் குடித்தால் போதை வருமா ?

வரும் என்கிறது

சாலையில் தள்ளாடும் பேருந்து !!!

இளமை நீடிக்க இனிய விதிகள்

இளமை நீடிக்க ஏழு விதிகள் உள்ளன.
விதி 1 : உடல் நலனுக்குச் சரியான உணவும் போதுமான அளவு தண்ணீரும் தேவை. புரதம், மாவுச் சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, போதுமான நீர், வைட்டமின்கள், தாது உப்புக்குள் அடங்கிய சரிவிகித உணவுத் திட்டத்தை தயாரித்துப் பின்பற்ற வேண்டும்.
விதி 2 : நீங்கள் வாழும் இடங்களில் சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் நன்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உடலில் கழிவு சேராமல் பார்த்துக் கொள்ளவும். இரண்டு முறை ‘வெளியே’ போவது மிக நல்லது.
விதி 3 : அதிக உஷ்ணத்தாலும் அதிகமான குளிர்ச்சியாலும் உடல் பாதிக்கப்பட்டால் பாதுகாக்க வேண்டும். சூடுபடுத்தப்படாத இயல்பான நீரிலேயே குளிக்க வேண்டும். உணவு உண்ட பிறகு குளித்தால் ஜீரணக்கோளாறு உண்டாகலாம். உணவு சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். மாலையில் குளிப்பது நல்லது.
விதி 4 : முறையான உடல் பயிற்சியோ அல்லது துரித நடைப்பயிற்சியோ தினமும் தேவை. இத்துடன் போதிய அளவு ஓய்வும் தாம்பத்திய வாழ்வும் தேவை. யோகாசனம், நாடி சக்தி, பிராணயமும் (மூச்சுப் பயிற்சி) அவசியம் தேவை. சூழ்நிலை இடம் தந்தால் பகலில் அரைமணி தூங்கலாம். சராசரியாக தூக்க நேரம் குறைந்தால் உடலும் மனமும் பாதிக்கப்படும். இரவு அதிக நேரம் விழித்திருந்து வேலை பார்ப்பது உடல் நலனை மட்டுமல்ல, மனதையும் பாதிக்கும்.
விதி 5 : உடலுக்குக் கெடுதல் செய்யும் மது, புகை, புகையிலை போன்ற பழக்கங்கள் கூடா. இவற்றால் உடலுக்கு நச்சுத் தன்மை அதிகமாகி உயிரணுக்கள் செயலிழக்க ஆரம்பிக்கின்றன. முதுமைத் தோற்றமும் விரைந்து ஏற்படும். மனக்கவலையைப் போலவே உடலுக்கு கிழட்டுத் தோற்றத்தை இவை தருகின்றன.
விதி 6 : உடல் பருமன் அடைய விடக்கூடாது. மாவுப் பொருள்களை அதிகம் சேர்த்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன்தான் இதய நோய், மூட்டு வலி உட்பட பல நோய்களின் தந்தை. எனவே, உடல் பருமனாக ஆரம்பிக்கும் போது உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் அக்கறை முதலியன தொடர வேண்டும். முப்பது வயதுக்குப் பிறகு புரத உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் உடல் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் இரும்புச் சத்து, பி மற்றும் சி வகை வைட்டமின் மாத்திரைகளையும் சத்துணவுக் குறைபாட்டைச் சரி செய்யத் தினமும் சாப்பிட டாக்டரிடம் ஆலோசனைகளைப் பெறவும்.
விதி 7 : மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாவும் வைத்துக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கும், இளமை மாறாத தோற்றத்திற்கும் அவசியம்.
ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் உங்களின் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெற்றிகளை நினைத்துப் பார்ப்பதாலும் இளமைக்காலத் தோற்றத்தை மனக்காட்சிகளாக பார்ப்பதாலும், இளமை மாறாத தோற்றம் அமையும். சிறு வயதில் பள்ளி சென்ற அனுபவங்கள் அடிக்கடி மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் படமாகத் தெரிந்தால் உயிரணுக்கள் செயல் இழக்காமல் புதுப்பிக்கப்படும்.
மேலும் பிரார்த்தனை, தியானம், தொழுகை, புத்தகம் படித்தல், இசை கேட்டல், கடமையை முழு ஈடுபாட்டுடன் செய்தல் முதலியனவும் மனதுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கவல்லவை.
எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வும், நம்மிடம் கற்பனை வளமும் உள்ளன என்ற நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையாலும் உடல் நலன் பாதுகாப்பாக இருந்தும் நமது இளமைத் தோற்றத்தை நீடித்துத் தரும்.

வாழ் நாளை உயர்த்தும் உணவு பழக்கம்

ஒரு நல்ல சத்துணவு நிபுணர், சமச்சீர் உணவு என்றால் புரதமும் இரும்புச் சத்தும் உள்ள அசைவ உணவையும் சேர்த்துத்தான் சொல்லுவார். ஆனால், புலால் இல்லாத தாவர உணவுத் திட்டத்தைப பின்பற்றினால் அதில் ஏழு அற்புத நன்மைகள் உள்ளன என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
பிரிட்டீஷ் மருத்துவப் பத்திரிகை 39 வயது முதல் 60 வயது வரை உள்ள 6000 சைவ உணவுக்காரர்களையும், 5000 அசைவ உணவுக்காரர்களையும் 12 ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்தது. சைவ உணவுக்காரர்கள், 40க்கும் குறைவாகவே புற்றுநோயால் இறக்கும் அபாயம் இருந்தது.
மற்ற வியாதிகளால் இறக்கும் அபாயம் 20 தான் இருந்தது. அசைவ உணவுக்காரர்கள் உடலில் இறப்பு அபாயம் அதிகம் இருந்தது. கொலாஸ்டிரல், புற்றுநோய் அறிகுறிகள் பரவலாகக் காணப்பட்டன.
அசைவ உணவுக்காரர்களைவிட சைவ உணவுக்காரர்களின் உடலில் வளர்ச்சி மாற்றம் பதினோரு சதவிகிதம் மெதுவாக நடைபெறுகிறது. குறைந்த அளவு கலோரி உணவு என்பதால் செல்களும் அழியாமல் இருக்கின்றன. எனவே, காலையில் நம்பிக்கையுடன் எழும் உத்தரவாதம் உண்டு. அசைவ உணவு திடீர் ஸ்டிரைக் செய்து உடல் நலக்குறைவை ஏற்படுத்தும். ஆடு, மாடு, பன்றி முதலியவற்றில் அரைக்கிலோ கறி உருவாக 2500 கேலன் தண்ணீரும், 7-1/2 கிலோ தானியங்களும், விலங்குகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் பழங்கள், காய்கறிகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இவ்வளவு செலவுகள் இல்லை. சைவ உணவு மலிவானது. தினமும் அசைவம் சேர்த்துக்கொண்டால் உடல் நலம் கெடுவதுடன், ஏகப்பட்ட செலவு உணவிற்கே போய்விடும்.
கையில் மாத்திரை ரெடியாக வைத்திருக்க வேண்டாம். அடிக்கடி டாக்டரைச் சந்தித்து, புதிய மருந்துகள் எழுதி வாங்க வேண்டாம். புலால் உணவு பதப்படுத்தப்பட்டோ அல்லது உயிர்வாழ்வுக்கு ஊறு செய்கிற நன்மைக் கொல்லிகளை கொல்வதற்காகச் செய்கிற சில மருந்துகளைக் கலந்துதான் விநியோகிக்கப்படுகிறது. இந்த வகையில் பால் அருந்தும்போது கூட விஷ மருந்துகள் நம் உடலுக்குள் போய்விடுகின்றன. பழம், காய்கறிகளில் இப்படி இல்லை. காய்ச்சல் வருவதுபோல் இருந்தால் சாதாரணப் புடலங்காயைச் சாப்பிட்டால் போதும். இதில் எல்லாவகையான தாது உப்புக்களும் இருப்பதால் உடனடியாகக் காய்ச்சல் குறைகிறது. ஆக, சைவ உணவு என்பது மருந்தைப் போல் செயல்படுகிறது.
துரித உணவகங்களில் விற்கப்படும் அசைவ உணவுவகைகளைச் சாப்பிட்டுவிட்டு வந்தவர்களிடம் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களின் ஞாபகசக்தி, புலன் உணர்வு, உள்ளத்தில் எச்சரிக்கை முதலியன மிகவும் சராசரியாக இருந்தன. சுற்றுப்புற ஆரோக்கியம் என்ற இதழில் இந்த உண்மை வெளியானது. ஆராய்ச்சியாளர்கள், அசைவ உணவுகளில் போரன் என்ற உப்பு இல்லாததால் தான் இப்படி அசட்டையாக உள்ளனர் என்று கண்டுபிடித்தனர். தக்காளி, பேரிக்காய், வேர்க்கடலை போன்றவற்றில் இந்த உப்பு இருக்கிறது. பழங்கள், காய்கறிகளிலும் இந்த உப்பு ஓரளவு கிடைப்பதால் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் புலால் உண்ணாத சைவ உணவுக்காரர்கள்.
கொழுப்பு அதகிம் கொண்ட விலங்குகளைச் சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது. மந்தப் புத்தியும் இயலாமையும் சேர்ந்து கொள்கின்றன. இரத்தக் குழாய்களில் தடை ஏற்படுகிறது. தாம்பத்திய வாழ்வில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் ஆர்வமாக வாழக் கீரைகளில் உள்ள இரும்புச் சத்தும், வைட்டமின் ‘சி’யும் உதவுகின்றன. இதனால் எல்லா உறுப்புகளுக்கும் இரத்தமும், ஆக்ஸிஜனும் நன்கு செயல்படுகிறது. ஆண்மைக்குறைவு, இருதய அடைப்பு முதலியன ஏற்பட வாய்ப்பில்லை. இந்த நன்மைகள் பழங்கள், காய்கறிகளில்தான் தாராளமாகக்க கிடைக்கின்றன.
நாக்கு ருசியால் உடல் கொழுப்பதுண்டு. உடல் வேகமாகக் கொழுத்த, பருத்த உடலாக மாற அசைவ உணவு காரணமாகிறது. ஆனால், சைவ உணவில் உள்ள கொண்டைக்கடலை, சோளம் போன்ற தானியம் மற்றும் பருப்பு வகைகள்கூட இரத்தக் கொதிப்பு, உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்கின்றன. இவற்றில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை இரத்தக்கொதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன. தேங்காய், சோளம் முதலியவற்றில் உள்ள துத்தநாக உப்பு உடலைக் கொழுக்கவிடாமல் இராணுவக் கட்டுப்பாட்டுன் பாதுகாக்கிறது. இதுபோன்று அரிய உணவு மருந்தாக அசைவ உணவு வகைகளை ஒட்டுமொத்தமாகச் சிபாரிசு செய்யமுடியாது. கொழுத்த உடல் பல வியாதிகளுக்கு அடிப்படை.
ஆக, சைவ உணவுக்கு மாறினால் ஆரோக்கியமாக மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் தயவு இன்றி நீண்ட நாள் வாழலாம் என்பது உறுதி.

கவலைக்கு மருந்து

உடற்பயிற்சி செய்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்தப் பழைய உண்மையை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மீண்டும் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இத்துடன் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது டி.வி., தியானம் போன்றவற்றிற்குப் பதிலாக இருபது நிமிடங்கள் உடற்பயிற்சியோ அல்லது துரித நடை ஓட்டமோ செல்வது நல்லது. இதற்காக நன்கு துடிப்பாகச் செயலாற்றும் 34 மாணவர்களை மூன்று குழுவாகப் பிரித்தனர். முதல் குழு ஓர் அறையில் அமைதியாக அமர்ந்தது. இரண்டாவது குழு பரிசோதனைச் சாலைக்குள்ளேயே ‘ஜாக்கிங்’ செய்தது. மூன்றாவது குழு உடற்பயிற்சி செய்தது. இருபது நிமிடங்கள் கழிந்ததும் ஓவ்வொரு குழுவையும் பரிசோதித்தனர். உடற்பயிற்சி செய்தவர்கள் மற்ற இரு குழுவினர்களைவிட 25% அளவில் ஓய்வு நிலையில் இருந்தனர். தியானமும், ஜாக்கிங்கும் கொஞ்ச நேரம் கழித்து ஓய்வு நிலையைத் தரும். உடனடி நிவாரணத்திற்கு உடற்பயிற்சி நல்லதாம்.
கவலைப்படாதே சகோதரா…
உடல் நலமும் நல்ல உற்சாகமான மனநிலையும் தேவை என்றால் கவலைப்படாதீர்கள்!
எப்படிப்பட்ட நோயும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தால் நமது அமைதியே உடல் அணுக்களில் பரவி நோய்களைக் குணமாக்கிவிடும். பிரச்னைகளுக்கு எளிதாகத் தீர்வினைக்கொண்டு வந்துவிடும்.
இந்த முறையைப் பின்பற்றினால் எளிதாக குணம் பெறலாம். மருந்துகள் மீது உள்ள நம்பிக்கை அதிகமாவதைவிட, நம் உடல் தானாகவே குணப்படுத்திக்கொள்ளும் சக்தியுடையது. அது நன்றாகக் குணமாகிவிடும் என்று மனப்பூர்வமாக ஒரு இம்மியளவு கூட சந்தேகம் இல்லாமல் முழுமையாக நம்பினால் முற்றிலும் குணமாகிவிடும். எனவே, மகிழ்ச்சியாக வாழுங்கள்.
இந்த உண்மைகளை ஆஸ்திரிய மனோதத்துவ டாக்டரான ஆல்பிசட் ஆட்லர் கண்டுபிடித்து நிரூபித்தும் காட்டினார்.
கவலையினால்தான் இதய நோய், புற்றுநோய் மட்டுமல்ல மூட்டுவலி, தலைவலி, இளமையிலேயே முதுமை, வயிற்றுக்கோளாறுகள் முதலியன வருகின்றனவாம்.
உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் கவலைப்படாதீர்கள். நம்பிக்கையுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்புங்கள். கஷ்டங்கள் அகலும் என்று நம்புங்கள்.
இத்துடன் உங்கள் நோயையும் அகற்றும் மனதையும் அமைதிப்படுத்தும் சில உணவு மருந்துகளையும் பின்பற்றுங்கள்.
மாடர்ன் ரொட்டி போன்ற கோதுமை ரொட்டியைக் காலையில் சாப்பிடுங்கள். இல்லையெனில் கைக்குத்தல் அரிசி, கோதுமை உப்புமா சாப்பிடுங்கள். டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் மூளைக்கு படுவேகமாகச் செல்லவும் செய்தி சொல்லவும் தவிடு நீக்காத இந்த தானிய உணவுகள் உதவுகின்றன. இதனால் மூளையும் மனமும் அமைதியடைகின்றன. நோய் தானாகக் குணமாக உடலில் சூழ்நிலைகள் உருவாகின்றன.
ஆரஞ்சுப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதில் உள்ள பொட்டாசியம் உப்பு அடிக்கடி மூளைக்கு கண்ட கண்ட கவலைகளையும் தெரிவிக்கும் மின் ஆற்றல் போன்ற துடிப்புகள் கொண்ட நரம்புகளைக் கட்டுப்படுத்தி மனதை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும்.
இதே நன்மைகளை வாழைப்பழம், சீஸ், பால், ஏப்ரிகாடி, வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளும் செய்கின்றன. குறிப்பாக வாழைப்பழமும், பாலும் தினமும் சாப்பிட்டு மூளைக்குக் கவலைகளைத் தெரிவிக்கும் நரம்புகளைக் கட்டுப்படுத்துங்கள்.
சட்டென்று குணம் மாறி வள் வள் என்று விழுதல் என்பது கவலையான பின்னணியின் வெளிப்பாடே. வைட்டமின் பி (B) குறைந்தாலும் எளிதில் கோபம் கொள்ளுதல் அதிகரிக்கும். இதனால் நரம்புகள் பலவீனமாகும். கவலைகளால் புதிய நோய்கள் உண்டாகும். எனவே இவர்கள் உருளைக்கிழங்கைத் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். அசைவம் எனில் மீன் நல்லது. இந்த வைட்டமின் மீனின் மூலம் நன்கு கிடைக்கும்.
உணர்ச்சிக் கொந்தளிப்பால் உடலும் மனமும் சோர்வடையும் சிலருக்கு மூளைக்காய்ச்சல் கூட வரலாம். தயாமின் என்ற பி வைட்டமின் அதிகமுள்ள அரிசி, மீன், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள் மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் நன்கு சேர்த்துப் பலப்படுத்த ஹார்லிக்ஸ், ஹார்லிக்ஸ் ரொட்டி போன்ற மாவு வகைகளையும் ரொட்டி வகைகளையும் உணவில் சேர்க்கவும்.
மக்னீசியம் குறைந்தால் உடலும் மனமும் கடும் சோதனையில் இருக்கின்றன என்று பொருள். இவர்கள் டாக்டர்களையும் மாற்றுவார்கள். இவர்கள் சோயா மொச்சையையும் வாழைப்பழத்தையும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டும். மதியம் பசலைக்கீரை அல்லது தண்டுக்கீரை சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து கிடைக்கும் மக்னீசியம் உணர்வுகளைச் சமநிலைப்படுத்தும். இதனால் நோய்களும் குணமாகும்.
தினமும் மூளையுடன் தொடர்புள்ள இரண்டு கட்டை விரல்களையும் சரியாக 5 நிமிடங்கள் பிடித்து விடுங்கள். பிறகு 15 அல்லது 20 நிமிடங்கள் கண்களைமூடி அமைதியாக இருங்கள். கடல் என்றோ அமைதி என்றோ மனதுக்குள் சொல்லித் கொள்ளலாம். இந்த இரண்டு அம்சங்களாலும் மனம் உண்மையில் அமைதியடையும். கவலையை முறியடிக்கும் உணவுகளும் தினமும் சேர மன அமைதி தொடர்ந்து கிடைக்கும். இதனால் பல்வேறு நோய்களும் குணமாகும். பிரச்னைகளுக்கும் நல்ல முடிவுகள் தோன்றும்.

சாம்ப்ராணி இலை

சாம்பிராணி இலை
இது சிறிய செடியாக இருக்கும். தண்டு எளிதில் உடையும் தன்மை வாய்ந்தது. இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும்.
இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.
இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும்.
இதில் இரண்டு வகை உண்டு. அடி வரை வளரும் வேர்கள், அதன் ஆழம் செல்லாமல் கொத்து வேராகவே இருக்கும்.
மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும்.
தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.
அழகுக்கூடும்…