Pages

Friday, December 19, 2008

ஆண்களுக்கு மட்டும்

ஆண்களும் அழகு செய்து கொள்ளலாமே!
மேலை நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் ஆண்கள் அழகு நிலையங்கள் பெருகி வருகின்றன. பெண்கள் மட்டுமல்லாமல் தாங்களும் அழகை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று பரவலாக ஆண்களிடம் தோன்றியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயமாகும்.
மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதுபோல, மணமகனுக்கும் இந்நாளில் அலங்காரம் செய்கிறார்கள். பெண்ணைப் போல் ஆண்களுக்கு நகைகளோ, அதிக மேக்கப்போ வேண்டியதில்லை. பிளீச்சிங், ஃபேஷியல், தலைமுடி, மீசை ஆகியவற்றை ‘டிரிம்’ செய்தல், கால்களைச் சுத்தம் செய்யும் பெடிக்யூர் போன்ற பயிற்சிகள் செய்தல், தலைமுடியை ‘ஷாம்பூ’ இட்டு முடியை அவரவர் முகத்திற்கேற்றவாறு ‘செட்’ செய்தல் ஆகியவற்றோடு லேசாக மேக்கப் இட்டுத் தயார் செய்துவிடுகிறார்கள்.
இன்று பெண்களைப் போல் ஆண்களும் மாதம் ஒருமுறை அழகு நிலையங்களுக்குச் சென்று வருகிறார்கள்.
அழகான உடலும் அமைதியான உள்ளமும் அளித்திடும் யோகாசனம்
யோகாசனப் பயிற்சிகளும், ‘மெடிட்டேஷன்’ எனப்படும் ஆழ்நிலை தியானமும் மனத்தை மட்டும் அமைதிப்படுத்துவதோடல்லாமல் உடலழகையும் பாதுகாக்கின்றன. அவை உடலின் உள்ளுறுப்புகளையும் பலப்படுத்திச் சரிவர இயக்குகின்றன. உடலும் மனமும் என்றும் இளமையோடும் இருக்கவும் முடிகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ‘யோகாசனம்’ ஒரு வரப்பிரசாதமாகும்.
சிலு முக்கிய ஆசனங்களையும் அவற்றால் ஏற்படும் பலன்களையும் கீழே காண்போம்.
பத்மாசனம்:நேராக நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து, இடக்காலை வலத்தொடையின் மீது, வலக்காலை இடத்தொடையின் மீதும் வைத்து, நேராக நிமிர்ந்து உட்காரவும், பத்மாசனத்தில் தினம் உட்கார்ந்து பழகினால் எளிதாகிவிடும். இதனால் கூன் முதுகு நேராகும். இடுப்பு நோய் தீர்ந்து, புத்திக்கூர்மை உண்டாகும். முழங்கால்களில் ஏற்படும் வலி தீரும்.
பஸ்ச்சிமோத்தாசனம்:இருகால்களையும் நீட்டி நேராக உட்கார்ந்து இரு கைகளையும் மேலே உயர்த்த வேண்டும். பின் மெதுவாக மூச்சை இழுத்து, மெதுவாக மூச்சை விட்டுக் கொண்டே கை விரல்களால் கால் கட்டை விரல்களைத் தொட வேண்டும். இந்த ஆசனம் செய்யும்போது, வயிற்றைச் சற்று உள்ளுக்கிழுத்து முன்புறமாய்க் குனிந்து, இரு கால்களின் கட்டை விரல்களைச் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். முழங்காலை மடக்க வேண்டாம். முழங்காலில் தலைபடுமாறு இருத்தல் நலம். இம்மாதிரி 3 நிமிடங்கள் இருக்கலாம். வயிற்றிலுள்ள அதிகப்படியாக சதைகள் குறைக்கப்பட்டு வயிறு, இடுப்புப் பகுதிகள் அழகாய்த் தோற்றமளிக்கும்.
தனுராசனம்:படுத்துக் கொண்டு இரு கால்களையும், முழங்கால்களுக்கு மேலுள்ள பாகத்தையும் மடித்து இருகைகளையும் நேராக நீட்டிக் கால்களின் மணிக்கட்டுகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும். மூச்சைப் பிடித்துக் தலையைத் தரையிலிருந்த தூக்கி நேராகப் பார்க்கவும். நிதானமாய் மூச்சு விடவும். இப்பயிற்சியை 5 தடவை செய்யலாம்.
அட்ரினல், தைராய்டு, பிட்யூட்டரி சம்பந்தப்பட்ட சுரப்பிகளைச் சரிவர இயங்கச் செய்யும் இந்த ஆசனம் புத்துணர்ச்சியைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றுக் கோளாறுகளை நீக்கி, நீரிழிவு நோயையும் குணமாக்கும்.
சிரசாசனம்:மிருதுவான போர்வையின் மேல் மெல்லிய மெத்தையை விரித்து, கைகளை ஆதரவாய் வைத்து, உடம்பைச் சிறிது சிறிதாக மேலே தூக்க வேண்டும். இடுப்புவரை உயர்த்தி பின், கால்களை மேலே உயரத்தூக்க வேண்டும். 15 செகண்டுகள் இந்த ஆசனத்தில் இருக்கலாம்.மூளையைச் சுறுசுறுப்பாக்கக் கூடியதும் மனத்திலே தெளிவையும், அமைதியையும் ஏற்படுத்தக்கூடியதுமான இந்த ஆசனத்தை இருதய நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்யக் கூடாது.
சக்ராசனம்:உடம்பின் முழுப் பாரத்தையும் கைகள் மேலும், கால்கள் மேலும் வைத்து, இடுப்பு, வயிறு ஆகியவற்றை வளைத்துக் கைகளைத் தரையில் ஊன்ற வேண்டும். உள்ளங்கால்கள் தரையில் நன்கு ஊன்றப்பட்டிருக்க வேண்டும். மெதுவாகச் சுவாசம் செய்து முடித்துப் பழைய நிலைக்கு வரவும்.
இதனால் கண் பார்வை நன்கு தெரியும். உடலுக்கும், சருமப் பளபளப்பிற்கும் ஏற்ற ஆசனம்; இது மூச்சுவிட முடியாமல் இருப்பவர்களுக்கு ஏற்ற ஆசனம்.
வஜ்ராசனம்:இருகால்களையும் மடக்கி உட்கார்ந்து, பின்புறங்கள் இருகுதிகால்களின் மேல் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் மூன்று முதல் 5 நிமிடம் வரை இருக்கலாம்.
இதன் மூலம் வயிற்றுக்கோளாறு, ஜீரணக் கோளாறு ஆகியன சரியாகும். முதுகுத் தண்டுவடம் பலப்படும். அஜீரணம் ஏற்படும் போது இந்த ஆசனத்தைச் செய்வது நல்லது.
விபரீத கரணி:நேராகப் படுத்து, கால்களிரண்டையும் 90 டிகிரிக்கு நேர் மேலாக மெதுவாக நேரே உயர்த்த வேண்டும். உயர்த்தும்போது, மூச்சை இழுத்து விட்டுக் கொண்டே இரண்டு கைகளால் பக்கவாட்டில் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இம்மாதிரி 10 தடவை செய்யலாம்.
இந்த ஆசனம் மூலம் இடுப்பு, வயிறு, பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கலாம்.
அழகுக்கூடும்..

சில டிப்ஸ்

ஆரோக்கியமாக வாழ……
வெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப் போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை’ அடிக்கடி முகத்தில் தெளித்துக் கொண்டால் முகம் ‘பளிச்’சென இருக்கும்.
அடிக்கடி கை, கால்களை நீரில் நனைப்பது நல்லதல்ல. கையுறை, கால் உறைகளை அணிவது நல்லது. அல்லது வேலை செய்யும்போது அடிக்கடி கழுவாமல் துடைத்துக் கொள்ளலாம்.
நெயில்பாலிஷ் ரிமூவரை அடிக்கடி உபயோகித்தால நகங்களுக்கு கெடுதல் ஏற்படும். நகங்கள் நன்கு வளர ‘ஜெலட்டின்’ தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவும். வாரம் ஒரு முறை எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து, பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடும்.
நண்பரையோ, உறவனிர்களையோ கேட்டு எந்த மருந்தும் உட்கொள்ளாதீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
உணவு உண்டபின் எந்தக் காரணத்தைக் கொண்டும் உட்கார்ந்து கொள்வதோ படுத்துக் கொள்வதோ உடலுக்குப் பின்புறம் பருமனை அதிகப்படுத்தும்.
உடலில் எந்த ஒரு பாகத்திலாவது சுளுக்கு, வலி, வீக்கம் ஆகியன ஏற்பட்டால், பூண்டை உரித்து, அதன் சாற்றைத் தேங்காய் எண்ணையுடன் கலந்து நன்கு தேய்த்தால் மேற்குறித்தவை நீங்கும்.
இரவில் நன்கு உறக்கம் வராவிட்டால் அதற்காக மாத்திரை ஏதும் சாப்பிட வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு அரை டம்ளர் சூடான பால் அருந்தினால் உறக்கம் நிச்சயம்.
மஞ்சளைக் சூடாக்கி, பவுடராகக் செய்து கொண்டு அதை உப்புடன் சேர்த்துத் தினமும் பற்களைக் துலக்கின் வாய் துர்நாற்றம் மறையும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் ‘டின்’னில் அடைக்கப்பட்ட உணவுகள், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள், உலர்ந்த வகைகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட டிரிங்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
உணவு உண்ணும்போது மெதுவாக, அவசரம் இல்லாமல் சாப்பிட்டால் நல்லது. உப்பைக் குறைத்துக் கொள்வதன் மூலம் பருமனையும் குறைக்க முடியும்.
காலை உணவைத் தவிர்க்காதீர்கள். காலை வேலைகளைத் தொடங்குவதற்கு முன், ஏதாவது காலை உணவு சாப்பிட்டால்தான் அன்று முழுவதும் வேலை செய்ய சக்தி உண்டாகும்.
வீட்டில் குனிந்து, நிமிர்ந்து செய்யும் வேலைகளை வலியச் செய்யும்போது, உடலுக்கு வடிவம் கிடைக்கும்.
எலுமிச்சம் பழத்தில் ஒரு பாதியை முகம் முழுவதும் தேய்த்துவிட்டு, சற்று நேரம் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய்ப் பசையுள்ள முகம் உலர்ந்து பளீரென இருக்கும்.
வீட்டிலேயே பின் வருமாறு ‘பிளீச்சிங்’ செய்து கொள்ளலாம். பாலேட்டையும், எலுமிச்சம் பழ ஜூஸையும் கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும். இம்மாதிரி தினமும் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்.
வெயிலில் அலைந்ததால் ஏற்படும் கருமையைப் போக்க எலுமிச்சம் பழ ஜூஸில் ரோஸ் வாட்டர் கலந்து கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவலாம்.
குளிர்காலத்தில் சருமம் உலர்ந்து காணப்படும். இதைப் போக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைக் குழைத்து உபயோகிக்கலாம்.
முகத்திலுள்ள சுருக்கங்களைப் போக்க, ஒரு ஸ்பூன் தேனில், காரட் ஜூஸை கலந்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்.
முகத்திலுள்ள தழும்புகளை மறைக்க, சருமத்திற்கேற்றவாறு ஃபவுண்டேஷனை உபயோகிக்கலாம்.
களைப்பாயிருக்கும் போதும், வெயிலில் அலைந்து வந்தவுடனும் உணவு உட்கொள்ள வேண்டாம்.
உதடுகள் வெடித்திருந்தால், ‘பெட்ரோலியம் ஜெல்லி’யை உதடுகளில் இலேசாக மசாஜ் செய்யவும்.
பாலீஷ் போட்டதும், விரைவில் காய்வதற்கு, ஐஸ் வாட்டரில் நகங்களை வைத்தால் உங்கள் நெயில் பாலீஷ் சீக்கிரம் உலரும்.
அடிக்கடி டென்ஷன் ஆகாமல், எதையும் ‘ஈஸி’யாக எடுத்துக் கொள்வது நல்லது. டென்ஷன் அதிகமானால், உடல் அசதி, மனச்சோர்வு படப்படப்பு, பசியின்மை, கண்ணுக்குக் கீழே கருவளையங்கள், குடற்புண்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு.
அழகுக்கூடும்…

அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்

  1. நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் ரசித்து, நிதானமாய்ச் சாப்பிட முடிகிறதா? அலுவலகம் செல்பவர்கள் தினமும் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் சென்று நெரிசலில் சிக்கித் திணறி அலுவலகம் செல்கின்றனர். அங்கு பணிகளை முடித்துவிட்டு, அப்பாடா என்று வீடு திரும்பினாலும் அவர்களால் நிம்மதியாக உணவருந்துவது என்பது கடினம்தான். அவர்கள் வாழ்க்கை இயந்திரத்தனமானதுதான்! ஆயினும் உழைத்தால்தானே உயர முடியும்! உழைப்புக்கு உடல் நலம் ஏற்றதாக இருக்க வேண்டாவா? உடல் ஒத்துழைக்க நன்கு சாப்பிட வேண்டுமே?
    அலுவலகம் செல்பவர்களுக்குச் சில யோசனைகள் தருவது நல்லதென்று கருதுகிறேன்.
    காலை உணவைத் தவிர்க்காதீர்!

    பெரும்பாலும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில், காலை உணவைத் தவிர்ப்பது பலரின் பழக்கமாகிவிட்டது. காலை வேளையில்தான் உங்கள் சக்தி முழுமையாய் இருக்கும். அந்த வேளையில் சக்தியளிக்கக்கூடிய உணவை நீங்கள் அளிக்காவிட்டால், அன்று முழுவதும் களைப்பாயிருக்கும்; வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் அல்லது தக்காளி அல்லது ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் இவைகூட உங்கள் சக்திக்குப் போதுமானவை. வைட்டமின் மாத்திரைகள்தான் உடல் நலம் அளிப்பவை என்று கருதாதீர்கள்.

    இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகிய உணவு வகைகளே உடல்நலத்திற்கு உகந்தவை.சாப்பிடும்போது, எந்த வேலையும் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. சிலர் சாப்பிடும்போது புத்தகம் படிக்கிறார்கள். இது மிகவும் தவறு. காலையில் சாப்பிடாமல் மதியம் சிலர் அதிகமாக உண்பார்கள். இதுவும் தவறு. குறைவான உணவை நேரம் தவறாமல் ரசித்தும், மெதுவாகவும் சாப்பிடுவதும் சிறந்தது. வேகமாகவும், மனச்சோர்வுற்றிருக்கும்போதும் உணவு உட்கொள்வது நல்லதல்ல. மதிய உணவிற்கு முன்னர் எதையாவது கொறித்துத் தின்ன வேண்டாம். காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் ஒரு டம்ளர் இளநீர் அல்லது மோர் அருந்தினால் போதும். நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற சதைகள் உருவாகும்.

    காபி, டீ குறையுங்கள்!
    காபியும், டீயும் சுறுசுறுப்பை அளிக்கின்றன என்று கருதிக் கொண்டு பலர் இவற்றை அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையில் அடிக்கடி காபி, டீ குடிப்பது உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும், உடனே இந்தப் பழக்கத்தை விடமுடியாதாவர்கள், படிப்படியாக டீ அல்லது காபி உட்கொள்வதைக் குறைத்துக் கொண்டு வரலாம். காபி, டீ அடிக்கடி குடிப்பது இளநரை ஏற்படுவதற்கும் காரணமாய் அமைகிறது.
    வழியில் விற்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடாதீர்கள்
    வீட்டிற்கு வரும் வழியில் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிடும் பழக்கம் அலுவலகம் செல்லும் பலரிடம் இருக்கிறது. இவர்கள் பிரயாணம் செய்யும்போதும், சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது நல்ல பழக்கம் அன்று. அது உங்கள் இரவு உணவையும் பாதிக்கும். ரெடிமேட் உணவு வகைளான Instant Food, Fast Foods ஆகியவற்றை இரவு உணவாகப் பயன்படுத்தாதீர்கள். அதிகமாக எண்ணெய் உள்ள பண்டங்களையும், வறுத்தெடுத்த பண்டங்களையும் தவிர்த்து வேகவைத்த உணவு வகைகளைக் சாப்பிடலாம்.

    இரவு நேர ஸ்நாக்ஸ் வேண்டாம்
    டி.வி. பார்க்கும்போதும், ஓய்வாக வீட்டில் அரட்டை அடிக்கும் போதும், பாதி ராத்திரியில் தூக்கம் இல்லாமல் படுத்துப் புரண்டு கொண்டிருக்கும்போதும், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏதாவது ஒன்றைக் கொறித்துச் சாப்பிட வேண்டுமென்றால் காரட், பீட்ரூட், வெள்ளரி போன்றவற்றைத் துண்டுகளாக நறுக்கி அவற்றைச் சாப்பிடலாம்.
    உடற்பயிற்சி
    அலுவலக வேலை செய்யவே நேரம் இருக்கிறது என்று அலுத்துக் கொள்பவர்கள், காலையில் சற்று சீக்கிரம் எழுந்து, 15 நிமிடமாவது உடற்பயிற்சியும், தியானமும் செய்தால் அன்று முழுவதும் களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும். உடலும் அதிக எடையற்றதாக இருக்கும்!
    அழகுக்கூடும்…