Pages

Monday, November 30, 2009

விவேகானந்தரின் பொன்மொழிகள்..

*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

*வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

*ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.

*ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

* ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!

*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

*எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். *எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.

*தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும்.

*அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும். *ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.

*அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.

*இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.

*தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.

*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).

*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

*பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

*கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

*உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.*மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

*சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

*அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

*உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.

*நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.

*இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.

* கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

* ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.

* உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.

*மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.

* உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும்.

* உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.

* உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.

* பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

* சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும். *தியானம்எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடையில் தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்!

*ஞானதீபம் ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம். அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!

*மனதை அடக்கு எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.

Wednesday, November 18, 2009

நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

நம் எல்லாருக்கும் சரிசமமாக ஆண்டவனால் அளந்து கொடுக்கப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம்.
நேற்று என்பது செல்லாத காசோலை.
நாளை என்பது பிராமிசரி நோட்டு.
இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம்.
எனவே, இன்றைய நேரத்தை எப்படிச் செலவழிக்கின்றோம் என்பதே முக்கியமான கேள்வி.
1. நேரத்தை திட்டமிடுங்கள் (Time Scheduling)
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை ஒவ்வொரு 30 நிமிடத் தையும் செயல்வாரியாக, அட்டவணைப் படுத்துங்கள். உங்கள் செயல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.அ. பயனுள்ளவைஆ. அன்றாடச் செயல்கள்இ. பயனில்லாதவை
உங்கள் 24 மணி நேரத்தில் எத்தனை மணிகள் பயனில்லாதவையாக செலவழிக்கப் பட்டிருக்கின்றது என்பதை கண்கூடாக அறிய முடியும். அவற்றைக் குறைத்து பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்துங்கள். அன்றாடச் செயல்களிலும் தேவையான அளவு நேரத்தை மட்டுமே உபயோகப்படுத்துங்கள். இவ்வாறு பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்தினால் நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக மாறி வருகிறீர்கள் என்பது உறுதியாகிறது.
2. நேரத்தை வீணடிக்கும் நிகழ்ச்சிகள்(Time Wasters)
நேரத்தை வீணடிக்கும் செயல்களுக்கு இரண்டு காரணங்கள் : நீங்கள் மற்றும் மற்றவர்கள்
அ. நீங்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்1. ஒத்திப்போடுதல் (Procrastination)2. போதுமான விவரங்கள், தெளிவு இல்லாமை3. மற்றவர்கள் மேல் பழி கூறுதல்
ஆ. மற்றவர்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்1. அன்றாட அலுவல்களில் மற்றவர்களுக்காக தேவைக்கதிகமான நேரம் செலவழித்தல்.
2. விருந்தினர், சுகமின்மை, மின் தடங்கள், மற்றும் பல.3. பிறர் செய்யும் தவறுகள்4. சூழ்நிலை
உகந்த நேரம் (Preferential / Prime Time)
ஒவ்வொருவருக்கும் காலை முதல் இரவு வரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரம் உற்சாகமும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அந்த வேளையில் மூளையும் சிறப்பாகச் செயல்படும். சிலருக்கு அதிகாலையாக இருக்கலாம். சிலருக்குப் பின்னிரவாக இருக்கலாம். உங்களுக்கு உகந்த நேரத்தில் கடினமான, முக்கியமான விஷயங்களைச் செய்தால் அது சிறப்புப் பெறும்.
காலந்தவறாமை (Punctuality)
கால தாமதம் நமது நேரத்தை மட்டுமின்றி, மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிக்கிறது. சிறிது முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் இருந்தால். காலதாமதம் ஏற்படாது. மேற்கத்திய நாடுகளில் காலதாமதம் ஒரு மன்னிக்க முடியாத குற்றமாக, கேவலமாகக் கருதப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் காலந் தவறாமையின் மகத்துவம் இன்னும் பலருக்குப் புரியவில்லை என்பது தான் வேதனை. காலந் தவறாமை ஒரு தலைவருக்குள்ள தகுதிகளில் முக்கியமானது.நேரத்தை நிர்வகித்தல் (அன்றாட வேலைகள் தவிர)உங்கள் வேலைகளை 4 வகையாகப் பிரியுங்கள்.
1. செய்தே ஆக வேண்டிய வேலை (Got to do)இன்றேசெய்ய வேண்டிய முக்கி வேலைகள் – அவசரம்
2 செய் வேண்டிய வேலை (Need to do)அடுத்த சில நாட்களில் முடிக்க வேண்டிய வேலைகள் – முக்கியம்ஆனால் அவசரமில்லை.3. செய்ய விரும்பும் வேலை (Like to do)உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வேலைகள் – முக்கியமும் இல்லை – அவசரமும் இல்லை.
4. செய்யக்கூடாத வேலைகள் (Not to do)
வேண்டாத குப்பைகளை, பேப்பர்களை, சேகரித்தல், தேவையற்றநீண்ட நெடிய உரை யாடல்கள், வாக்குவாதங்கள், சிந்தனைகள்.
நேரத்தை பயன்படுத்த சில குறிப்புகள்
1. ஆங்கில அகராதியில் ஓரிரு வார்த்தைகளை யாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.2. 15 அல்லது 30 நிமிடம் மனதிற்குப் பிடித்த நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.3. மறுநாளைக்கு தேவையானவற்றை தயார் படுத்த வேண்டும்.4. தினமும் நாட்குறிப்பில் மணிவாரியாக உங்கள் செயல்களைப் பதிவு செய்யுங்கள்.5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். நாளைய வேலையையும் இன்றே செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதீர்கள்.6. கடினமாக உழைக்க வேண்டும் என்பதில்லை; திட்டமிட்டு, அழகாக, கவனமாக, உரிய நேரத் தில் உரிய வேலையை உளமாரச் செய்தால் போதும்வெற்றி உங்கள் வீடு தேடி வந்து வாழ்த்தும்.
நேரத்தை – திட்டமிடுங்கள்! – பயன்படுத்துங்கள்! – கடைப்பிடியுங்கள்!

Wednesday, November 4, 2009

நீங்களும் I.A.S. ஆகலாம்

ஐ.ஏ.எஸ்"., சொல்லும்போதே ஒரு இன்பமும், கம்பீரமும் தானாகவே தலை தூக்கும். நிறைய அதிகாரம் கொண்ட பதவி. அரசு சேவைகளில் ( போக்குவரத்து உட்பட ) நிறைய சலுகைகள் உண்டு. மற்றபடி சம்பளம் அதிகமென்று சொல்லிவிட முடியாது, என்றாலும் இந்தியாவை வல்லரசாக்கும் கனவு கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான அற்புத நுழைவாயில் இது.
சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது:
IAS ஆக சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அது சுலபமல்ல. சுமார் ஒரு வருடத்திற்காவது அது இழுத்துச் செல்லும். இந்த தேர்வுகளை நடத்துவது, UPSC ( UNOIN PUBLIC SERVICE COMMISSION). இந்த தேர்வுகளை எழுதுபவர் பல்வேறு அரசு பதவிகளில் சேர வாய்ப்பு உண்டு என்றாலும், பலரது கனவும் IAS தான். கலெக்டர் கனவு. தேர்வுகளில் க்ரூப் A வில் உச்சமாகக் கருதப்படுபவை IAS, IFS, IPS ஆகியவை. இதே பிரிவில் உள்ள பிற துறைகள் Customes, Excise, Revenue, Postal ஆகியவை. IAS, IPS பதவிகளில் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி. பிறவற்றுக்கு நேபாளம், பூடான், திபெத் அகதிகளுக்கும் அனுமதி உண்டு. பட்டதாரிகள் மட்டுமல்ல, பட்டப் படிப்பைக் கடைசி வருடம் படிப்பவர்கள் கூட இந்த தேர்வை எழுதலாம். 21/30 வயதுக்குள் அதிக பட்சம் 4 முறை எழுதலாம். OBC என்றால் 7 முறையும், SC/ST என்றால் எவ்வளவு முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் விவரம்:
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் இது குறித்த அறிவிப்பு வரும். போஸ்டல் ஆர்டர் அனுப்பி, UPSC அமைப்பிடமிருந்து விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பம் சுமார் இருபது ரூபாய். ஜனவரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டியிருக்கும். மார்ச் அல்லது ஏப்ரலில் ஹால் டிக்கெட் வந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று நுழைவுத் தேர்வு நடைபெறும். இறுதித் தேர்வு அக்டோபர், நவம்பரில் நடைபெறும்.
நுழைவுத் தேர்வு:
நுழைவுத் தேர்வில், பொதுக் கல்வி ( General Studies, 150 marks) விருப்பப் பாடம் (300 marks) என்று இரண்டு தாள்கள். இதில் நெகட்டிவ் மதிப்பெண் முறை உண்டு. அதாவது தவறான விடைகளைத் தேர்ந்தெடுத்தால் மதிப்பெண்களைக் குறைத்து விடுவார்கள். முதல் தாளில் இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, சமீபத்திய நிகழ்வுகள், தினசரி அறிவியல், புள்ளி விவரங்களின் அடிப்படைத் தன்மைகள் ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெறும். ஜூலை அல்லது ஆகஸ்டில் நுழைவுத் தேர்வின் ரிசல்ட் வெளியாகிவிடும். வென்றவர்கள் இறுதித் தேர்வை எழுதலாம்.
இறுதித் தேர்வு:
இறுதித் தேர்வில் ஒன்பது பேப்பர்கள்.
* பதினெட்டு இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்று.
* ஆங்கிலத் தகுதிக்கான தேர்வு.
மேற்கூறிய இரண்டும் தகுதிக்கானவை.
* ஒரு பொதுக் கட்டுரைத் தேர்வு. (அதிக மதிப்பெண் 200)
* இரண்டு பொது அறிவுத் தேர்வுகள்.(ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300).
* நான்கு விருப்பப் பாடங்கள் (ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300), (ஆங்கில பாடத்தைத் தவிர மற்றவற்றைத் தமிழ் மற்றும் பிராந்திய மொழிகள், ஹிந்தியிலும் எழுதலாம்).
இப்படி மொத்த மதிப்பெண்கள் இரண்டாயிரம். இதோடு நேரடித் தேர்வுக்கான முந்நூறு மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரிசையில் ( பெரும்பாலும் IAS, IPS, IFS என்றுதான் இவை முறையே இருக்கும்), பதவிகள் அளிக்கப்படும். நேர்முகத் தேர்வு டெல்லியில்தான் நடக்கும். இதற்கு முந்நூறு மதிப்பெண்கள்.
டிப்ஸ்::
* கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இந்த இந்த பாடத்திலிருந்து இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. அந்த அளவுகோல் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குப் பொருந்தாது. ஒருசில பொதுவான அனுமானங்கள் வேண்டுமானால் உதவலாம். உதாரணமாக, சமீப வருடங்களில் நுழைவுத் தேர்வில் முதல் தாளில், சமீபத்திய நாட்டு மற்றும் உலக நடப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* நுழைவுத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகிய இரண்டிலுமே விருப்பப் பாடமாக ஒன்றையே எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் நேரமும் குறையும், ஆழமாகவும் படிக்கலாம்.
*எதில் மிக அதிக மதிப்பெண் ஸ்கோர் செய்ய முடியுமோ, அதை விருப்பப் பாடமாக தேர்வு செய்வது புத்திசாலித்தனம். Accountancy, வேதியியல் போன்ற பாடங்களில் சரியான விடை என்றால் முழுமையான மதிப்பெண்ணை கொடுத்தே தீர வேண்டும். ஆனால் இதெல்லாம் எப்போதும் எடுபடும் வாதமல்ல.
* ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்தால், அவற்றில் சில பாடங்களாவது, இரண்டிலும் இடம் பெற்றிருக்கும். இயற்பியலும் வேதியியலும், விலங்கியலும் தாவரவியலும், பொலிட்டிகல் சயின்ஸும் வரலாறும், புவியியலும் சமூகவியலும் இப்படியாக ஜோடிகளை அமைத்துக் கொள்ளலாம். உங்கள் இரு விருப்பான பாடங்களுக்குமான தேர்வு நாட்களுக்கும் நடுவே போதிய இடைவெளி இருக்கும்படியான பாடங்களை தேர்ந்தெடுப்பது ஓர் உத்திதான்.
* விடைகளை வேகமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். காரணம், குறைந்த அவகாசமே இருக்கும்.
* சில பிரிவுகளில் சாய்ஸ் இருக்கும். அப்போது தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பதில்கள் எந்த கேள்விக்கு அமையுமோ அவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
* ஒரு முறைக்கு மேல், தேர்வை எழுத மனதைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் முறையே தேர்வில் வெற்றி பெற்று வந்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.
* நாளிதழ்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். ஆங்கில நாளிதழ்தான் ஏற்றது.
* Civil Services, Chronicle, Front Line, Competition Wizard, Competition Success & GK போன்றவை தேர்வுக்கு தயார் செய்ய பெரிதும் உதவுபவை.
* BA போன்ற பட்டப் படிப்பென்றால் இரண்டாம் வருடமும், BE போன்ற தொழில் முறைப் படிப்பு படித்தால் மூன்றாவது வருடமும் பயிற்சி வகுப்புகளில் சேருவது சிறப்பு.