ஐ.ஏ.எஸ்"., சொல்லும்போதே ஒரு இன்பமும், கம்பீரமும் தானாகவே தலை தூக்கும். நிறைய அதிகாரம் கொண்ட பதவி. அரசு சேவைகளில் ( போக்குவரத்து உட்பட ) நிறைய சலுகைகள் உண்டு. மற்றபடி சம்பளம் அதிகமென்று சொல்லிவிட முடியாது, என்றாலும் இந்தியாவை வல்லரசாக்கும் கனவு கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான அற்புத நுழைவாயில் இது.
சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது:
IAS ஆக சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அது சுலபமல்ல. சுமார் ஒரு வருடத்திற்காவது அது இழுத்துச் செல்லும். இந்த தேர்வுகளை நடத்துவது, UPSC ( UNOIN PUBLIC SERVICE COMMISSION). இந்த தேர்வுகளை எழுதுபவர் பல்வேறு அரசு பதவிகளில் சேர வாய்ப்பு உண்டு என்றாலும், பலரது கனவும் IAS தான். கலெக்டர் கனவு. தேர்வுகளில் க்ரூப் A வில் உச்சமாகக் கருதப்படுபவை IAS, IFS, IPS ஆகியவை. இதே பிரிவில் உள்ள பிற துறைகள் Customes, Excise, Revenue, Postal ஆகியவை. IAS, IPS பதவிகளில் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி. பிறவற்றுக்கு நேபாளம், பூடான், திபெத் அகதிகளுக்கும் அனுமதி உண்டு. பட்டதாரிகள் மட்டுமல்ல, பட்டப் படிப்பைக் கடைசி வருடம் படிப்பவர்கள் கூட இந்த தேர்வை எழுதலாம். 21/30 வயதுக்குள் அதிக பட்சம் 4 முறை எழுதலாம். OBC என்றால் 7 முறையும், SC/ST என்றால் எவ்வளவு முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
விண்ணப்பிக்கும் விவரம்:
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் இது குறித்த அறிவிப்பு வரும். போஸ்டல் ஆர்டர் அனுப்பி, UPSC அமைப்பிடமிருந்து விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பம் சுமார் இருபது ரூபாய். ஜனவரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டியிருக்கும். மார்ச் அல்லது ஏப்ரலில் ஹால் டிக்கெட் வந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று நுழைவுத் தேர்வு நடைபெறும். இறுதித் தேர்வு அக்டோபர், நவம்பரில் நடைபெறும்.
நுழைவுத் தேர்வு:
நுழைவுத் தேர்வில், பொதுக் கல்வி ( General Studies, 150 marks) விருப்பப் பாடம் (300 marks) என்று இரண்டு தாள்கள். இதில் நெகட்டிவ் மதிப்பெண் முறை உண்டு. அதாவது தவறான விடைகளைத் தேர்ந்தெடுத்தால் மதிப்பெண்களைக் குறைத்து விடுவார்கள். முதல் தாளில் இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, சமீபத்திய நிகழ்வுகள், தினசரி அறிவியல், புள்ளி விவரங்களின் அடிப்படைத் தன்மைகள் ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெறும். ஜூலை அல்லது ஆகஸ்டில் நுழைவுத் தேர்வின் ரிசல்ட் வெளியாகிவிடும். வென்றவர்கள் இறுதித் தேர்வை எழுதலாம்.
இறுதித் தேர்வு:
இறுதித் தேர்வில் ஒன்பது பேப்பர்கள்.
* பதினெட்டு இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்று.
* ஆங்கிலத் தகுதிக்கான தேர்வு.
மேற்கூறிய இரண்டும் தகுதிக்கானவை.
* ஒரு பொதுக் கட்டுரைத் தேர்வு. (அதிக மதிப்பெண் 200)
* இரண்டு பொது அறிவுத் தேர்வுகள்.(ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300).
* நான்கு விருப்பப் பாடங்கள் (ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300), (ஆங்கில பாடத்தைத் தவிர மற்றவற்றைத் தமிழ் மற்றும் பிராந்திய மொழிகள், ஹிந்தியிலும் எழுதலாம்).
இப்படி மொத்த மதிப்பெண்கள் இரண்டாயிரம். இதோடு நேரடித் தேர்வுக்கான முந்நூறு மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரிசையில் ( பெரும்பாலும் IAS, IPS, IFS என்றுதான் இவை முறையே இருக்கும்), பதவிகள் அளிக்கப்படும். நேர்முகத் தேர்வு டெல்லியில்தான் நடக்கும். இதற்கு முந்நூறு மதிப்பெண்கள்.
டிப்ஸ்::
* கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இந்த இந்த பாடத்திலிருந்து இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. அந்த அளவுகோல் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குப் பொருந்தாது. ஒருசில பொதுவான அனுமானங்கள் வேண்டுமானால் உதவலாம். உதாரணமாக, சமீப வருடங்களில் நுழைவுத் தேர்வில் முதல் தாளில், சமீபத்திய நாட்டு மற்றும் உலக நடப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* நுழைவுத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகிய இரண்டிலுமே விருப்பப் பாடமாக ஒன்றையே எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் நேரமும் குறையும், ஆழமாகவும் படிக்கலாம்.
*எதில் மிக அதிக மதிப்பெண் ஸ்கோர் செய்ய முடியுமோ, அதை விருப்பப் பாடமாக தேர்வு செய்வது புத்திசாலித்தனம். Accountancy, வேதியியல் போன்ற பாடங்களில் சரியான விடை என்றால் முழுமையான மதிப்பெண்ணை கொடுத்தே தீர வேண்டும். ஆனால் இதெல்லாம் எப்போதும் எடுபடும் வாதமல்ல.
* ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்தால், அவற்றில் சில பாடங்களாவது, இரண்டிலும் இடம் பெற்றிருக்கும். இயற்பியலும் வேதியியலும், விலங்கியலும் தாவரவியலும், பொலிட்டிகல் சயின்ஸும் வரலாறும், புவியியலும் சமூகவியலும் இப்படியாக ஜோடிகளை அமைத்துக் கொள்ளலாம். உங்கள் இரு விருப்பான பாடங்களுக்குமான தேர்வு நாட்களுக்கும் நடுவே போதிய இடைவெளி இருக்கும்படியான பாடங்களை தேர்ந்தெடுப்பது ஓர் உத்திதான்.
* விடைகளை வேகமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். காரணம், குறைந்த அவகாசமே இருக்கும்.
* சில பிரிவுகளில் சாய்ஸ் இருக்கும். அப்போது தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பதில்கள் எந்த கேள்விக்கு அமையுமோ அவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
* ஒரு முறைக்கு மேல், தேர்வை எழுத மனதைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் முறையே தேர்வில் வெற்றி பெற்று வந்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.
* நாளிதழ்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். ஆங்கில நாளிதழ்தான் ஏற்றது.
* Civil Services, Chronicle, Front Line, Competition Wizard, Competition Success & GK போன்றவை தேர்வுக்கு தயார் செய்ய பெரிதும் உதவுபவை.
* BA போன்ற பட்டப் படிப்பென்றால் இரண்டாம் வருடமும், BE போன்ற தொழில் முறைப் படிப்பு படித்தால் மூன்றாவது வருடமும் பயிற்சி வகுப்புகளில் சேருவது சிறப்பு.
No comments:
Post a Comment